In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Monday, December 11, 2017

பனியும் பொழிவும்

மென்மையாகவே பொழிகிறது இவ்வெள்ளை பனி.
சுட்டு எரிக்கும் வெயில் போலில்லாமல்,
சடசடவென அடித்து பெய்யும் மழை போலும் இல்லாமல்
தன்மையாக, மென்மையாக பொழிகிறது இப்பனி.

அன்றி,
கூர்கொண்டு எரிக்கும் வெயிலின் பின்னேயும்,
நனைத்து வழியும் மழையின் பின்னேயும்,
பசுமை பூக்க எழுந்து நிற்கும் மரங்களும் கிளைகளும்-
பனியால் வெண்மை போர்த்தி
கறுத்து நிற்கின்றன -திக்கி திகைத்த
புது கைம்பெண் போல! :(


Wednesday, August 30, 2017

DummiesforUrIntrospectionHindus #1

ஒரு மன்னிப்பும் கொஞ்சம் கேள்விகளும் ....
"இந்து சேரியை கொளுத்துவான்
இந்துத்துவா மசூதியை இடிக்கும்"

பல்வேறு மீம்கள் உலா வரும் இணைய உலகில், இப்படி ஒரு மீம் பகிர்ந்ததற்கு சில வருத்தங்கள் ஏற்பட்டு விட்டது.
அவ்வருத்தத்திற்கு மன்னிப்பும், அதனுடனே சில கேள்விகளை வைத்துள்ளேன். பதில் இல்லையெனினும் கேள்விகள் உங்களுக்காகவே...

இந்து எனப்படுபவன் யார்?
அவமானப்படும்படியான செய்தியான சேரியை எரிக்கும் செயல் எப்படி, எதற்க்காக இந்து என்பவனுடைய தலையில் ஏறியது ?
சரி, சேரியை சேர்ந்தவர்கள் எம்மதத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள், பெரும்பான்மையாக?

ஒரே மதத்தினவர்களாக இருந்தும் கோவிலில் நுழைய தடை இருந்ததும், 1924ல் பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதை தெரியுமல்லவா?
இதோ 2017 ஆண்டு, பெரிய கோவில்களில் இப்பிரச்சனை இல்லாவிடுனும், இன்றும் இந்து நம்பிக்கை உள்ளவர்கள் சில ஆலயங்களுக்குள் நுழைய ஏற்படும்  பிரச்சனைகளை செய்திகளாக கண்டிருக்கீர்களா?

ஒரே மதத்திற்குள் இருந்தும் அனைவர்க்கும் சமநிலை இருக்கிறதா ?
எதனால் படிநிலைகள் இருக்கிறது?
படிநிலையில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
எதனால் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்?
அதனால் தங்களுக்கு என்ன வசதி?

மேல் படியில் உள்ள பிரிவினரை தாங்கள் காணும் போக்கு என்னது?
கீழ் படியில் உள்ளவர்களுடனான தங்கள் உறவு எப்படியாக உள்ளது?
இதற்கு மூல காரணம் என்ன?

ஹிந்து எரிப்பான் என்று சொன்னவுடன் வரும் கோபம், தாக்கப்பட்டவன் எம்மத நம்பிக்கை உடையவன்(எம்மதமாயினும் தாக்கப்படுவது மனித உரிமை மீறிய செயல் ), அவன் எதற்கு தாக்கப்படுகிறான் என்பதை (பாவம் புண்ணியம் தாண்டி) நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

இக்கேள்விகளை அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக இதுவரை அணுகவில்லையெனில், ஏன் ?

ஒரு இந்து இன்னொரு இந்துவால் தாக்கப்படுவது, அதுவும் தான் நம்பும் இந்து கடவுளை தன் சேரியை சுற்றி வர ஆசைப்பட்டதிற்கு எனில்  இந்துவாக தங்கள் சமாதானம்/பதில்  என்ன?

ஒரே மதம் அதில் இருக்கும் அனைவரையும் இந்து என்று சேர்க்காமல் , பிரிந்து பிளந்து கிடப்பது எதனால் ?

இக்கட்டான பொழுதுகளில் (ஹிந்துக்களில்) காணப்படும் inert நிலையினை கண்ட கோபமே அந்த மீம்..
இப்பொழுது சொல்லுங்க எனக்கான சமாதானம்?






Saturday, August 5, 2017

எனக்கே எனக்காக..


சிட்டு குட்டியின் துறுதுறு விளையாட்டு இல்லா வீட்டில்  
சாவி கொண்டு, தானே உள் நுழைகிறேன்.
அவன் இனிய ரீங்காரம் கேட்காமலும், 
அவன் தாயின் அன்பு குரல் இல்லாமலும்,
அவன் தந்தையின் நேர்த்தியான செயலற்ற வீட்டில் 
பெருத்த அமைதி வரவேற்கிறது!

புதிய தேசத்தின் மௌனம் கனமாக நிரம்பி வழிய 
தேடி வந்த நாட்டின் குளிர், அறையினுள் பரவுகிறது.
நினைவுகளை மெல்ல அசைபோடுகிறேன்..
உறவுகளும் நட்புகளும் வெகு தொலைவில் இருக்க 
நான் இங்கு தனியே..

வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லாதபொழுதும் 
காணாத அனுபவத்தை தேடி 
புதிய வாசத்தை நுகர,
இங்கு நான் :)

இதோ எனக்கான 'என்' நாட்கள் தொடங்கிற்று...

அடிபுல் ருசிக்க,
ஆனந்த குரலிசைக்க,
களித்து வாழ ,
நுரையீரல் முழுதும் காற்று நிரப்ப  
வேறு உலகம் அறிய- என 
எத்தனை எத்தனை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் :D 

நிலையானதும்,
சரியென்றும் தவறென்று 
எதுவும் எப்பொழுதும் கிடையாதே!
வாழ்ந்து தான் பார்க்கிறேன்
எனக்கே எனக்கான நாட்களை...

Sunday, February 19, 2017

கணினி பெண்கள் நாங்கள்

2000ல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பெரும்பான்மையோர் போல கணினி துறையில் வேலைக்கு சேர்ந்து இதோ 11 வருடங்கள் ஓடி விட்டது. குறைவில்லாத வேகமும் விறுவிறுப்பும் கொண்ட ரோலர் கோஸ்டர் பயணமாகவே இத்துறையில் பணி இருந்து கொண்டு வருகிறது.

பெங்களூர்ல ஐ. டி. வேலையா ஐயோ ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்குமா? பொண்ணுங்களுக்கு இந்த வேலை தேவையா என்ன? நம்ம ஊர்ல  பேராசிரியர் வேலை கிடைக்காதா? M  Tech படியேன்?  என்ன இருந்தாலும் அரசு பணி போல இருக்குமா ?Y2K போன்ற சூழ்நிலை வந்தா வேலை என்னாகும்?

அத்தனை அத்தனை கேள்விகளின் மத்தியில் கல்லூரியில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்த பத்து தோழிகள் நாங்கள்.
சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், கணினி, எலக்ட்ரானிக்ஸ், instrumentation   என அத்துணை பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்த நாங்கள், வெவ்வேறு நிறுவனங்களில் கணினி பொறியாளர்  வேலையில்  சேர்ந்தோம்.

குடும்ப பின்னணி மற்றும் சூழ்நிலையில் வேறுபட்டிருந்த நாங்கள், இன்று பொருளாதார சுதந்திரத்தோடும், social empowerment யுடன் இருப்பதற்கும்,  அதற்கு இந்த கணினி துறை பணியும் அதன் சம்பாத்தியமும் அனுபவமும் முக்கியாமானவை!

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியான என்  தோழி, தன் கடினமான  உழைப்பாலும் வெளிநாட்டு மென்பொருள் வேலையில் அமர்ந்து தன் அறிவாற்றலாலும்  மிக சில வருடங்களில்  தன் பெற்றோர்க்கு என  வீடு கட்டிமுடித்தாள்!
சிறிய வயதில் தந்தையை இழந்து, அறிந்தவரின் உதவித்தொகையில் பொறியியல் படித்த இன்னொரு தோழி, இன்று திருமணமாகி அமெரிக்காவில் மென் பொறியாளராக இருக்கிறாள்.  அம்மாவிற்கான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து, தன் தாயை போலவே கணவனை இழந்த மாமியாரையும் சேர்த்தே கவனித்துகொள்கிறாள்!

குடும்பத்தின் பொருளாதாரத்தை  தாங்குவதுடன் நிதி ரீதியான முடிவெடுப்பவர்களாகவும் பெரும்பான்மை பெண்கள் இருக்கின்றோம்.
பெண்களின் பொருளாதாரம் - குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எத்தனை அவசியமானது என்பதையும் ஆண்-பெண் சமநிலை உறவிற்கும் முக்கியம் என்பதை உணர்த்த மேம்பொருள் துறையால் ஏற்பட்ட பொருளாதார இலக்கு/உயர்வு நடுத்தர குடும்பங்களின் வளர்ச்சியாக கண்கூடாக இருக்கிறது!

"என்ன இது உங்க பொருளாதாரம் உயர்ந்திருச்சு, நீங்க செலவு செய்றதால எங்களுக்கு விலை கூடி போச்சு" என்ற புலம்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இலட்சங்களில் சம்பளம் இருந்தும் தேவையையும் அவசியத்தையும் புரிந்து, தங்கள் குழந்தையை பொறுப்பாக வளர்க்கும் அம்மாக்கள் இருப்பதும் இங்கு உண்டு.

வசதியான பணியிடங்கள், நடப்பு டெக்னாலஜியுடனான வேலை,வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை, கணிசமான ஆரம்பநிலை ஊதியம், இவையெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், பெண்கள் அதிக அளவில் விரும்பும் துறையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம்  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற எச். ர். திட்டங்களாகும்.

2000 ஆரம்பத்தில் ஏற்பட்ட கணினி பெண் ஊழியரின் கொலையின் பின்பு, பெரிய நிறுவனங்களும்(Infy , Wipro, HCL TCS, ...etc ) அனைத்தும் தங்கள் நிறுவன பெண்களின் பாதுகாப்பை மிக  உறுதியாக பாதுகாகின்றனர்(விதிவிலக்குகள் இடங்களை போல் இங்கேயும் உண்டு)!
பணி முடிந்த இரவு பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு,  அலுவலகத்தில் எந்நேரமும் உணரும் பாதுகாப்பை எங்கள் பெண் தோழியர் பெற்றுருக்கிறோம்.
அத்துடன் பெண்களுக்கு அசவுகரியம் (அ) எதிராக  நிகழக்கூடிய தொல்லைகளை விரைவாகவும்நம்பகவாகவும் தீர்த்துவைக்கும் குழுக்கள் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் விசாரிக்கப்படும் பிரச்சனைகளை பாதிக்கப்பட்டவருக்கு எந்த தொல்லையும் இல்லாதவாறு நடக்கின்றன.

கணினி மென்பொருள் பணியின் இன்றியமையாத பகுதி - தொடர் கற்றல், புதுப்பித்தல்! பெண்களின் இயல்பான கற்றல் ஆற்றல், மாறும் தொழிற்நுட்பத்தோடு ஈடு கொடுப்பதினால் பெண்கள் இயல்பாகவே இத்துறையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆரம்ப படி நிலை(fresher )பணிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. 7 ல்  ஒருவர் பெண்ணாக இருக்கின்றனர்/இருந்துள்ளனர். ஆரம்ப நிலை பணியில் அதிகம் இருக்கும் பெண்கள், மேல் பதிவுகளில் சொற்பமாக இருக்கின்றனர்!
ஆனாலும் இங்கு வயது வரம்பு disadvantage ஆக இருப்பதில்லை.
மகப்பேறு விடுப்பில் சென்று குழந்தை வளர்ப்பிற்க்காக  பணியிலலிருந்து விலகுபவர்களில் கணிசமானோர் சில வருடங்களில் மீண்டும் பணியில் சேருகின்றனர்.
இதற்க்கான அடிப்படை காரணம்  வேலை காலத்தில் கிடைக்கும் அனுபவமும் அதன் மூலம் பெரும் தரும் கற்றல்திறனுமாகும்!

ஒரு சில நிறுவனங்களில் அரை நாள் வேலைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் வந்து, அவர்கள் வீடு திரும்புவதற்குள் பணி முடித்து செல்லும் பெண்களுடன் வேலை செய்திருக்கிறோம்!

வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பும் அதிக அளவிலான நிறுவனங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. இணைய வசதியும் புதிய பரிமாணத்தில் வெளிப்பட்டு கொண்டிருக்கும் தகவல் தொடர்பு application களும், வீட்டிலிருந்து பணி செய்வதற்கு நிறுவனங்களை ஏற்று கொள்ள செய்கின்றது!

'பெற்றோர் ஆசிரியர் சந்திரப்பிற்காக', 'பெற்றோர் உடல்நலக்குறை' , 'AC ஒத்துக்கொள்ளும் உடல்நிலை இல்லை ' என்ற சில காரணத்திற்காக வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் எனும் மெயில்கள் ஒரு வாரத்திற்கு  10ஆவதுஇருக்கும்!

வேலை நேர Flexibility யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது -
அலுவலகத்திற்கு வருவதற்கும் போவதற்குமான கால நெகிழ்வுதன்மை . இது 'வரமா சாபமா என்ற அளவிற்க்கு விவாதங்கள் எங்களுடைய பெண்கள் குழுவில் நிகழும்.
வீட்டுவேலையை முடித்து பணி அலுவல்களை விடிய விடிய செய்யும் நிலை எங்கலுக்கு அடிக்கடி ஏற்படும்!

கணினி துறையின் வேலைகள் பல்வேறு அளவுகளிலும் பரிமாணத்தில் இருக்கின்றன!
செயல்திட்டத்தின் project - requirement தேவை, design வடிவமைப்பு, product இறுதி செயல்பாடு, அதனை சோதித்து சரி பார்க்க(test verification ), குறைநீக்குதல்(defect fixing),  வெளியீட்டு திட்டம்(release பிளான்) மார்க்கெட்டிங், ஆவணப்படுத்தல், வாடிக்கையாளர் எங்கேஜ்மெண்ட், மேனேஜ்மென்ட்  என ஒவ்வொரு பணி படிநிலையில் பெண்கள் பங்கு நீக்கமற இருக்கிறது.

இத்தனை நன்மைகள் இருக்கும் பணி இடத்தில், வெளி உலகத்தை  ஒத்த சவால்களும் சில இருக்கின்றன.

ஊதிய வித்தியாசம்  அதன் பாலின பாகுபாடு இங்கும் மிகுந்திருந்தது. பெண்கள் என்றால் நிரந்தர ஊழியர் என்ற நினைவு பல இடங்களில் இருந்து கரைந்துவிடுகின்றது. தங்களுக்கு தகுந்த இடத்திற்கான போராட்டங்கள் பெண் என்பதால் 10-20% அதிகமாவே இருக்கின்றது.
அதே போல பதவி உயர்விலும் பெண்களுக்கு குடுக்கவேண்டுமா, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை இருக்கிறது. என்றோ ஒரு நாள் இவர்கள் நிறுவனத்துக்கு அதிக உபயோகமில்லாமல் பொய் விடுவார்கள் என்ற எண்ணம் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது!

தங்கள் பணி குழுவுடனான தொடர்புகள், மேலாளர்களுடனான networking ஆகியவற்றில் சுலபமாக இயங்கும் ஆண்களுக்கு மேற்கூறிய சிரமங்களை இலகுவாக்கி இருக்கலாம்.

அதுபோல அன்றாட பணிகளில் விரும்பிய வேலையை தேர்வு செய்யவும், திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கவும் பெண்களுக்கு ஒரு புலப்படாத கணம்/சவால் இருக்கத்தான் செய்கிறது!


மேலாளராக கணிசமான பெண்கள் இருந்தாலும், தொழில்நுட்ப ஆய்வாளர்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் . இதற்கான காரணங்கள் மேற்க்கூறியவைகளில்  ஏனைகளாக இருக்கக்கூடும். அப்படி இருப்பினும் இந்நிலையை களைய விவாதங்கள் மேற்கொள்ளப்படவேண்டும!

திறமைக்கு குறைவே இல்லை!எல்லா தாய்மார்களை போலவே தங்கள் குழந்தையை  தூங்க வைத்துவிட்டு smart வேலை செய்து Patents எனப்படும் அறிவு காப்புரிமை தாக்கல் செய்த பெண்களும் இங்கு இருக்கிறார்கள்; எங்களுக்கு inspiration ஆக !
திறமையில் எந்த குறைவில்லாத பெண்களுக்கும் மேற்கூறிய  சவால்கள் தொடர் சுமையாகவே இருக்கிறது !

அடுத்தது நிறுவன தலைமைகள் ; 10 தலைவர்களில் 2 பெண் தலைவர் இருக்கிறது சாத்தியமாகி இருக்கிறது. Infosys போன்ற நிறுவனங்களில், பெண் தலைவர்களுக்கு என்று ஒதுக்கீடு இருக்கிறது.
ஆரம்பநிலையில் பாதிக்கு பாதியாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை,  தலைமை பதிவிகளில் ஒருவர் கூட இல்லாத நிலைமை இருக்கிறது.
இந்த அவல நிலைய உணர்ந்த இன்போசிஸ் தலைமை, 2020 குள் 25% பெண்களை தலைமை பொறுப்புகளில் பங்கு வகிக்க வேண்டி இலக்கை நிர்ணயிட்டுள்ளது!

நிறைகள் குறைகள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிற கணினி பொறியாளர் பணியில் பெண்களாக நாங்கள் பயணிப்பது உற்சாக குறைவில்லாமல் இருந்துகொண்டிருக்கிறது !

குறைகள் கரைந்து போக, வாங்க ஒன்றிணைந்து கணினி அறிவியல் வளர்த்தெடுக்கும் பணிசெய்வோம்!


Sunday, February 12, 2017

வாங்க உரமாக்கலாம் - 3

வணக்கம் நண்பர்களே, உரமாக்கல் தொடரின் மூன்றாம் பகுதி இது!
முதல் இரு பகுதியிலும் ஏரோபிக் aerobic உரமாக்கல், அதாவது உயிர்வளி துணைக் கொண்டு, காற்றின் உதவியால் நிகழும் உரமாக்கல் முறைகளை பார்த்தோம்.
இந்த பகுதியில் அனிரோபிக் anerobic, அதாவது உயிர்வளியற்ற வகையில் நிகழும் உரமாக்கல் முறையை காண்போம்.

மேற்கூறியவாறு, அனிரோபிக் முறையென்பது காற்று புகாமல் நிகழும் உரமாக்கல் முறையாகும். இவ்வகையான முறைகளில் Bokashi எனப்படும் ஜப்பானிய உரப்படுத்தல் வழிமுறை சிறிய வீடுகளில் செய்ய மிக எளிமையான செயல்முறையாகும்.
வழக்கமான உரப்படுத்துதல் முறையில் காற்று புகுவதற்காக 2-3 நாட்களுக்கு ஒருமுறை உரப்பொருட்கள் கிளறப்படுகின்றன. இம்முறையில் அவ்வாறு  கிளற வேண்டிய அவசியம் இல்லை!

வீட்டின் சிறு முகப்பில் செய்யவதற்கு ஏதுவான Bokashi முறை, உரமாக்கல் முறைகளிலேயே அண்மையான முறையாகும் !

1982, ஜப்பான் நாட்டு பேராசிரியர் Teuro Higa அவர்களின் ஆராய்ச்சியை கொண்டு தொடங்கிய இம்முறை, EM  - Effective micro-organism எனப்படும் நுண்ணுயிர்களின் உதவியால் உர-மூல பொருட்கள் நொதிக்கவைக்க படுகின்றன.
Ferment என்னும் நொதித்தல் மூலம் திடக்கழிவுகள் உப்புக்கண்டம்/ஊறுகாய்  போல மாற்றப்படுகின்றன.
நொதித்தல் மூலம் brine எனப்படும் உப்பு நீர் வெளியேற்றபடும். இதனை தினசரி முறையில் பிரிக்க வேண்டும்.

bokashi உரமாக்கல் -இரட்டை படி செய்முறை கொண்டது.
முதலில் நொதித்தல் என்னும் முறையில் உர-திடபொருட்கள் நொதிக்க வைக்க படுகின்றன.
அதற்கு பின்னே உப்பு கண்டம் செய்யப்பட்ட  உர மூல பொருட்கள் , உரமாக்கல் கலனில் இடப்பட்டு மக்க வைக்கப்படும்.
மற்ற முறைகளை காட்டிலும், இம்முறையில் மிக விரைவாக உரமாக்கல் நிகழப்படும்.
Bokashi முறையில் உரமாக்க தேவையான பொருட்கள்.

1) நீர் வெளியேற வசதியான, மூடியை கொண்ட கொள்கலன் - முதல்  படியான நொதித்தல் செய்ய, இக்கலன் வேண்டும்.
2) EM - எனும் நுண்ணுயிர்கள் கலந்த bokashi மூல பொருள். தோட்ட பொருட்கள் கடைகளிலும், இணையத்திலும் bokashi கலவையை வாங்கிக்கொள்ளலாம்.




Bokashi கலவையை கலனின் அடிப்பகுதியில் தாராளமாக பரப்ப வேண்டும். சமையல் கழிவுகளை அதற்கு அடுத்த அடுக்காக சேர்த்து காற்று புகாதவாறு இவ்வுர பொருட்களை அழுத்தி மூடி வைக்கவேண்டும்.
நாள்தோறும் கழிவுகளை bokashi கலவையுடன் சேர்த்து கலனில் அடுக்கி கொண்டு வரலாம்.
ஒவ்வொரு முறையும் இக்கலவையை காற்று புகாதவண்ணம் அழுத்தமாக நெருக்கி வைக்கவேண்டும்.
இக்கலனிலிருந்து உப்பு நீரை தினந்தோறும் வெளியேற்றபட வேண்டும்.
 
2-3 வாரங்களில்  உர-மூலப்பொருட்கள் நொதிக்கப்பட்டு ஊறுகாய் போல மாறி இருக்கும்.


இவ்வகையில் உரமாக்க, காய்கறிகளோடு மாமிச எச்சங்கள் சிறிய அளவினால் ஆன எலும்பு துண்டுகளை சேர்த்து மக்க வைக்கலாம்.

2-3 வாரங்களில் ஊறுகாய் போல நொதிக்கபட்டு   கிடைக்கும் கழிவுகளை சாதாரண வகையில் உரமாக்கலாம். அவை பின்வருமாறு,
-பின் கட்டு தோட்டத்தில் 4 - 8 அங்குலம் கொண்ட குழியில் புதைத்து வைக்கலாம்.
-(அ ) மண் புழு உரமாக்கல் கலனில் இட்டுவைக்கலாம்.
-(அ ) எந்த ஒரு ஏரோபிக் உரமாக்கல் முறையிலும் சேர்த்து வைக்கலாம்.

மற்ற உரமாக்கல் முறைகளை காட்டிலும் சிறிய அளவில் செலவு தேவைப்பட்டாலும்(கலவை, காலன் போன்றவைக்கு), மிக விரைவாகவும் சக்தி நிறைந்த உரம் கிடைக்கபெறும் bokashi முறை, நகர பகுதியினரிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது!


கூடுதலாக பின்வரும் பயன்களும் கிடைக்கின்றன!


1) வீட்டில் வளர்க்கப்படும் ஆடு கோழிகளும் கூட இந்த நொதித்த உரத்தை விரும்பி உண்ணுவதாகும் கூறுகின்றனர்!
2) Brine எனும் உப்பு நீர், வீட்டின் குழாய்களின்/கழிவறையின் அடைப்புகளை நீக்க உதவும்.

சாதாரண முறையில் உரமாக்க படுவதை காட்டிலும் மிக விரைவாக,சக்திவாய்ந்த உரமாக்கல் முறையான bokashi யை செய்து  எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்!




Monday, January 2, 2017

வாங்க உரமாக்க கற்றுக்கொள்வோம் - 2

உரமாக்கல் முறைகளில் அடுத்து நாம் காண இருப்பது மண்புழு  உரமாக்கல். மண்புழு துணையுடன் செய்யும் இந்த உரமாக்கல் முறை 3-4 வாரங்களில் சமையலறை கழிவு குப்பைகளை உரமாக மாற்றும்.
விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு, குப்பை கழிவுகளை உரமாக்ககும் வழிகளை காண்போம்.

தேவையான பொருட்கள்

1) குப்பை கழிவுகளை உரமாக்க பானை அல்லது மரத்தாலான கலன் - குறைந்த பட்சம் 2/4 அடிகள். இதன் பக்கவாட்டில் துளைகள் இட்டிருக்க வேண்டும். வெளிச்சம் வெப்பம் இதன்  மூலம் உள் புகும்.
2) பழைய செய்தித்தாள்கள். இதனை அடுக்காக கொண்டு ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும்.
3) மண் - மண் புழுவின்  செயல்பாட்டிற்கு உதவும் மண்.
4) அட்டைப்பெட்டி யின் பகுதி.
5) மண் புழு. விவசாய பொருட்கள் விற்பனை கடைகளில்  கிடைக்கும். இப்போது இணைய கடைகளிலும் கிடைக்கிறது. சுலபமாக தோட்டத்தில் கிடைக்கும் சிகப்பு மண் புழுக்களையும் எடுத்துப்  பயன்படுத்தலாம்.



பக்கவாட்டில் துளை இடப்பட்ட மரத்தாலான கலனின் அடி பகுதியில் அட்டை பெட்டியின் பகுதியை வைக்கவும். இதன்  மேல் செய்தித்தாள்களை சிறு சிறு துண்டுகளாக்கி  பரப்பவும். புழுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை  இந்த அடுக்கு தக்க வைத்து கொள்ளும்.

இதன் மேல் கை பிடி அளவிற்கு தண்ணீரை தெளிக்கவும். அதிக அளவு தண்ணீர் சேர்த்தால் கழிவுகளோடு சேர்ந்து நாற்றம் விளைவிக்க கூடும். வெளிச்சத்தை விரும்பாத மண் புழுக்களுக்கு ஈரப்பதம் இன்றியமையாத ஒன்றாகும். அதற்காக கைப்பிடி அளவிற்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இதன் மேல் மண்ணை பரப்ப வேண்டும். மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள் மண் புழுவிற்கு உணவாகும் கழிவுகளை உடைக்க பயன்படும்.

மண் புழுக்களை இதற்கு மேல் போட்டு  வெளிச்சம் புகாதவாறு இந்த பானை/கலனை அடைக்கவும். மண் புழுக்கள் காகிதம் மற்றும்  மண்ணாலான மெத்தையின் ஊடே சென்றுவிடும்.

ஒரு நாள் விட்டு , சேர்த்து வைத்திருக்கும் குப்பை கழிவுகளை உரக்கலனில் இடவும். மண் புழுக்களை கழிவுகளின் ஊடே கொண்டு செல்லுமாறு
மண்/காகித மெத்தையை கிளறவும்.

வாரம் ஒரு முறை ஈரப்பதத்தை சரி பார்க்கவும். அதே போல குப்பைகளை கிளறி விடவும்.

3-4 வாரம் கழித்து மண் புழுக்களுக்கு உணவாகி எச்சமாக இருக்கும் ஆற்றல் நிறைந்த உரத்தை அறுவடை செய்யலாம். மண் புழுக்களை அடி பகுதியில் விட்டுவிட்டு உரமாக மாறிய கருப்பு தங்கத்தை மட்டும் எடுக்கவும்.

மண் புழுக்கள் காகித, தோல் மிச்சங்களை விரும்பி உண்ணும்,
பால் பொருட்கள், மாமிசை மிச்சங்களை இதனுள் கழிவாக போடவேண்டாம்.
ஒரு முறையில் மக்காத கழிவுகளை மீண்டும்  விட்டு வைக்கவும். அடுத்த முறை மண் புழு நண்பன் தன் வேலையை செவ்வனே செய்திருப்பார்! :)

நுண்ணுயிர்கள் நிறைந்த சக்தி வாய்ந்த உரம் மண் புழுக்களால் இதோ உங்கள் தோட்டத்திற்கு.

குறிப்பு: பின் கட்டில் இட வசதி இருப்பவர்கள் மண் புழு உரமாக்களை பெரிய அளவிலும் செய்யலாம்.