In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Monday, May 23, 2016

நெகிழி இல்லா நகரம் - பெங்களூரு!

பெங்களூர் நகரில் ஓர் அதிகாலை காட்சி -  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எதிர்ப்படும் அனைவரும் தத்தமது பைகளோடு வந்து கடைகளில் பொருட்களை வாங்கிகொண்டிருந்தனர். காய்கறிகள் மட்டுமின்றி அரிசி பருப்பு வகைகளும் தரமான காகித பைகளில் விற்பனையாகிறது!

இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா? சற்று யோசித்து பாருங்கள், சென்ற முறை நீங்கள் கடைக்கு சென்ற பொழுது எதிர்பட்ட எத்தனை பேர் துணி பைகளோடு வந்திருந்தனர்? எத்தனை பொருட்களை நீங்கள் காகித பொட்டலங்களிலோ துணி பைகளாகளிலலோ வாங்கினீர்கள்?
அப்படி ஒரு காட்சியை உங்கள் நினைவுகளை சில வருடங்களுக்கு முன்பு  இழுத்துசெல்கிறதா?

இடம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் ஊரில் பொதுவாகவே பொறுப்புணர்வு சற்று சளைத்திருக்கும். அதற்கு பெங்களூரு ஒரு எளிய உதாரணம். இந்தியவிலுள்ள பல்வேறு மாநிலத்தவர்களை கணிசமான எண்ணிக்கையில் இங்கு காண முடியும். ஐந்தில் ஒருவர் மட்டுமே கன்னடர்களாக இருப்பர்; அதிலும் உள்ளூர் மக்கள் பத்தில் ஒருவராகவே இருப்பர். இவ்வாறிருக்கும் மக்கள் தொகை அமைப்பில், தனித்து இயங்கும் போக்கும் பொறுப்பற்ற தன்மையும்  மிகுதியாக காணப்படுகின்றது.


இத்தகு ஊரில் முதன் முறையாக மக்களை நெறிப்படுத்தவும், அவல நிலையிலிருக்கும் சுற்று சுழலை பேணவும் கர்நாடக அரசு புது சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது .

அரசியலமைப்பின் 48ஆம் சட்டவிதியின் படி சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு மாநில அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம் நெகிழி சார்ந்த பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது!

பெரும்பாலான நெகிழி தடை என்பது 40 மைக்ரானுக்கு குறைந்த அளவிலான நெகிழி பயன்பாட்டை தடை செய்து வந்துள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாட்டை மட்டுமே இது நாள் வரையிலான தடைகள் கட்டுபடுத்திவந்தன.

ஆனால் கர்நாடக அரசின் இத்தடையானது நெகிழியால் செய்யப்பட்ட பைகள், தட்டு, கரண்டி, மேசை விரிப்புகள், பிளக்ஸ் சுவர் விளம்பரங்கள் என அனைத்தையும் தடைசெய்துள்ளது. பொது மக்கள், பெரு நிறுவனங்கள் என அனைத்து பிரிவினருக்கும் பொதுவாக இத்தடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இத்தடையை  மீறும் பொதுமக்களுக்கு முதல் முறை அபராதமாக 500 ரூபாயும் அதன் பிறகான மீறல்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படும்.
தடையை  மீறி உற்பத்தி செய்வோருக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை  அபராதம் பெறும்படி அரசு இச்சட்டத்தை அரசாணையில் வெளியிட்டுள்ளது.

வனத்துறை மற்றும் மருத்துவ துறைக்கு விலக்களித்துள்ள இச்சட்டம், பால் தயிர் முதலியவற்றின் பயன்பாட்டிற்கு மட்டுமே நெகிழியை அனுமதித்துள்ளது. மக்கவே மக்காத தெர்மோகோல், ஸ்டீரோபோம் போன்றவற்றையும் சேர்த்தே  தடை செய்துள்ளது.

ஆயிரக்கணக்கான சிறு குறு நெகிழி தயாரிப்பாளர்கள் இத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதையும் நாம் காண முடிகிறது. நெகிழி உற்பத்தியாளர்கள் இத்தொழிலிற்க்கு மாற்றாக  துணி, காகித, சனல் பை உற்பத்திக்கு மாறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் வருவாய் இத்தடையால் பாதிக்கபடுவதைக் காட்டிலும் நெகிழி கழிவுகளை அகற்றும் பணிகளால் ஆகும் செலவு அதிகமாக உள்ளதாக அரசு வருவாய் துறை குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றதில் தடை கோரிய நெகிழி உற்பத்தியாளர்கள், அதில் வெற்றி பெறவில்லை.

அரசோ இத்தடைய மிக தீவிரமாக நடைமுறை படுத்திக்கொண்டுள்ளது. மாநகர ஆணையாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கு இச்சட்டத்தை நடைமுறை படுத்தும் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளது.

சுழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை வரவேற்றதோடு அரசோடு இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை பாராட்டையும் வரவேற்பையும் ஏன் என்று கேட்பவரா நீங்கள்? உங்கள் வீட்டின்  தினசரி கழிவுகளை  கொஞ்சம் கவனியுங்கள். சில நூறு வருட சுவடை உங்கள் மூலமாக அவை விட்டுச்செல்லும்!

பெங்களூரு மாதிரியான மக்கள் தொகை வீக்கத்தை கொண்ட ஊரின் நாளொன்றின் நெகிழி கழிவு சுமார் 1050 டன் ஆகும். சாக்கடை அடைப்பிற்கும், மொத்த கழிவுகளை  அகற்றும் பணிகளில் நெகிழியானது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதோடு நிலத்தடி நீரின் வளத்தையும்  கடுமையாக பாதிக்கிறது.
மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் தேவைப்படும் இந்நெகிழியை நம் வீடு கழிவுகளிலிருந்து அகற்றுவதே தற்போதைய மாபெரும் சவால்!

சூழல்கேடு மட்டுமின்றி நெகிழியினால் ஆன டப்பாவில் உணவு பொருட்களை பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு கேடானது. மிக தரமான நெகிழி உணவு டப்பாக்கள்  கூட 1 வருட பயன்பாட்டிற்கு பிறகு உகந்ததில்லை என்று கூறப் படுகிறது. இத்தகவல்களை பொருட்படுத்தாமல் 500- 1000 ரூபாய்க்கு வாங்கிய உணவு டப்பாக்களை சில பல ஆண்டுகளுக்கு நாம் உபயோகப்படுத்துகிறோம்!

நம் பயன்பாட்டை எளிதாக்க வந்த நெகிழி நம் சுழல் நண்பர்களான கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை!
நோயுற்று இறந்த மாட்டின் வயிற்றில் கிலோ கணக்கில் நெகிழி இருந்தாக செய்திகளில் அவ்வபோது காண்கிறோம்.


இவ்வனைத்தையும் தொடக்க இடத்திலேய கட்டுப்படுத்த கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் தடை பெரிதாக உதவும்.

நெகிழி தடை சட்டத்தோடு மேலும் பல சுழல் இசைவான திட்டங்களை செயல்படுத்தும் தன்னார்வலர்கள் குழுக்கள் பெங்களூரில் உள்ளன.

பசுமை கல்யாணங்கள், மாரத்தான் போட்டிகள், காய்ந்த இலைகளை  மட்கி உரமாக்கல், அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்டாக மட்கும் குப்பைகளை உரப்படுத்தும்  திட்டங்கள் என்று பெங்களுர்வாசிகளிடம் இருந்து நாம் கற்று செயல்படுத்த சுழல் இசைவான திட்டங்கள் பல்வேறு உள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுழல் ஆர்வலர்களால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம்  Swachgraha . இத்திட்டத்தின் படி ஒவ்வொருவரும்  தங்கள் வீடுகளிலே மட்கும் கழிவுகளை பிரித்து உரமாக்கவும், அதிலிருந்து காய் கறிகள் தோட்டம் அமைத்து பசுமை புள்ளியை தொடங்கவும்  ஊக்குவிக்கிறது .

மட்கும் குப்பைகளை உற்பத்தியிடத்திலேயே களையவும், குப்பைகள் ஓரிடத்தில் சேர்வதை தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்யவும் என பல சாதகங்களை கொண்டுள்ள இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 லட்சம் பெங்களூருவாசிகளை பசுமை புள்ளியில் இணைக்க தீவிரமாக இக்குழுவினர் இயங்கிகொண்டுள்ளர்கள்!

இதற்கெல்லாம் நமது தொடக்க புள்ளி - சிந்தித்து செயல்படுவதே! நெகிழிக்கு மாற்றான காகித/துணி பைகளை எப்போதும் நம் கைவசம் வைத்திருப்பதும், திட்டமிட்டு செயல்படுவதுமே நெகிழியின் பயன்பாட்டை நீக்கிவும் கட்டுபடுத்தவும் உதவும்.

மக்கும், மகாத குப்பைகளை பிரித்து வைப்பதும், அடுத்தபடியாக உரமாக்கல் வழிகளை பழகுவதும்  நம் ஆரோக்கியத்திற்கும் சுற்று சூழலிற்கு நன்மை பயக்கும் திட்டங்களாகும்!
சிறு முயற்சி பெரும் நன்மை பயக்கும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு, எனவே நாமும் இதுபோன்று அக்கறையோடு செயல்படுவோமா ?